Monday, April 28, 2014

நச்சுக் கொடி கீழிறக்கம்(Placenta Previa)


பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும்.




                                                  நச்சுக்கொடி (placenta)


இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி இறக்கம்) எனப்படும்.

எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் இது இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த நோயின் தீவிரங்கள் தீர்மானிக்கப்படும்.

முற்றாக கீழ் பகுதியில் நச்சுக் கொடி அமையும் போது குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை மூடிக் கொண்டிருக்கும்.இது மிகவும் தீவிரமான 
நிலையாகும். இந்த நிலையில் சீசர் செய்வதைவிட வேறு வழியில்லை.






கருப்பை வாயில் வரை நச்சுக்கொடி(placenta) கீழிறங்கி இருக்கும் ஆபத்தான நிலை 

இந்த நோயின் அறிகுறி

கர்ப்பம் தரித்து ஆறு மாத காலமளவில் பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தம் போகுதல்.இதன் போது எந்தவிதமான வலியும்ஏற்படாது.இது எச்சரிக்கைக் குறியாக எடுத்துக் கொள்ளப்படும்(warning bleeding).அதாவது கர்ப்பம் தரித்து 5 மதத்திற்குப் பிறகு சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்பட்டாலேயே உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவற விடும் பட்சத்தில் அடுத்தமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது தீவிரமானதாக இருக்கும். அதற்கு முன்னமே வைத்திய சாலைக்கு சென்று முற்பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் 
செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாத்
படியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே  ஆக  வேண்டும்..

இந்த நோய் உள்ளது உறுதிப் படுத்தப்பட்ட பின்பு அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

நச்சுக்கொடி பெருமளவில் கருப்பையின் கீழ் பகுதியில் இருந்தால் அந்த நோயாளி குழந்தை பெறும் வரை வைத்திய சாலையில் நீண்ட 
நாட்களுக்கு இருக்க வேண்டி வரலாம். மேலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினத்திற்கு முன்னமே சீசர் செய்யப்படும்.

சிறிதளவான அளவில் நச்சுக் கொடி கீழே இருப்பவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படலாம். ஆனாலும் அடிக்கடி வைத்தய்சாலைக்கு செல்ல 
வேண்டியதுடன் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலையிலேயே குழந்தைப் பிறப்பு மேற்கொள்ள வேண்டும்.அவர்கள் சாதாரணமான
முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்....

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு அம்மாவின் உயிரைப் பறித்து விடக்கூடியது. ரத்தப் போக்கு குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் ஏற்படலாம்.

சீசர் செய்த பின்பு கூட இவர்களுக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படலாம். அதனால் நான்கு பைண்ட்ஸ் இரத்தம் தயாராக வைத்துக் கொண்டே அவர்களுக்கு சீசர் செய்யப்படும். 

அதேபோல சாதாரண குழந்தைப் பேரின் பின்னும் இரத்தப்போக்கு அதிகமாகப் போகலாம்.

அதனால் இந்த நிலையை சமாளிக்கும் வசதிகளாக இரத்த வங்கி ,சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்திய சாலைகளிலே குழந்தைப் பேறு மேற்கொள்ள வேண்டும்.



மிகவும் முக்கியமாக இந்த நோயாளிகள் குழந்தை பெறும் வரை முற்று முழுதாக உடலுறவைத் தவிர்க்க வேண்டும்..

Saturday, April 14, 2012

இயற்கையான கருத்தடை முறைகள்




உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.

இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.

முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .

அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது. 

அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல். 
இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.

இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை 
பாவிப்பது கட்டாயமாகும். 



ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம்




எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல்லோரும் அறிந்துதான் இருப்பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கும் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.அவ்வாறான சந்தேகங்களை களைவதற்கே இந்த விளக்கம்.

எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் சில திரவங்களின் நேரடித் தொடர்பினால் மட்டுமே தொற்றும். அதுதவீர சுவாசத்தின் மூலமோ உணவின் மூலமோ இந்த நோய் தொற்றுவதில்லை.

அதாவது எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள்

உடலுறவின் போது- நோயுள்ள ஒருவரோடு உடலுறவில் ஈடுபடும் போது இது தொற்றலாம். இது ஆண் பெண் தொடர்பு , அல்லது ஓரினச் சேர்க்கை 
என எந்தவிதமான உறவிலும் ஏற்படலாம்.அதேபோல் யோனி வழி ,குதவழி என எந்தவிதமான உறவின் போதும் தொற்றலாம்.
கொண்டம்(ஆணுறை) பாவிப்பது இவ்வாறு நோய் தொற்றுவதைத் குறைக்கும். எனினும் கொண்டம்(ஆணுறை) நூறு வீதம் பாதுகாப்பை அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நம்பகமான , எயிட்ஸ் நோய் இல்லாத ஒருவரோடு உடலுறவில் ஈடு படும் போது எயிட்ஸ் ஏற்படாது.

அடுத்தததாக நோயுள்ள ஒருவர் பாவித்த ஊசி ,பிளேட் ,சவரக் கத்தி போன்றவற்றை பாவிக்கும் போது. அதாவது இவ்வாறான கூரான உபகரணங்கள் மூலம் நோயுள்ளவரின் இரத்தம் நோயற்றவர்களின் இரத்தத்தோடு தொடர்பு படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் எயிட்ஸ் தொற்றலாம்.இந்த உபகரணங்கள் நோயாளியில் சிறிய காயத்தை ஏற்படுத்தி பின்பு நோய் இல்லதவரில் காயத்தை ஏற்படுத்தும் போது இரத்தம் தொடர்பு படலாம்.

இதைத் தடுப்பதற்கு தனித்தனியே சவரக் கத்தி பிளேட் என்பவற்றை பாவிக்க வேண்டும். சலூனுக்கு செல்லும் போது உங்களுக்கென தனியாக புது பிளேட் 
பயன் படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இது தவீர நோயாளியின் குருதி தவறுதலாக நோய் இல்லாதவருக்கு வழங்கப்பட்டாலும் எயிட்ஸ் தொற்றலாம்.

மேலும் நோயுள்ள ஒரு தாய் ,நோய் இல்லாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் எயிட்ஸ் தொற்றலாம்.